வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும்.


Pasumai4u
        வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

விருதுநகரில் வெடிவிபத்து: 5 பெண்கள் காயம்


Pasumai Nayagan




       விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டியில் தனியார் தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 5 பெண்கள் காயமடைந்தனர். முதலிப்பட்டியில் தேசிங்கு ராஜா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பட்டாசுகளை தொழிலாளர்கள் பேக்கிங் செய்து கொண்டிருந்த போது திடீரென்று உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் வீரம்மாள், அழகுமணி உட்பட ஐந்து பெண்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலை உரிமையாளர்கள் தண்ணீர் ஊற்றி தடயத்தை அழித்துள்ளதாகவும், காவல்துறைக்குத் தகவல் கொடுக்காமல் காயமடைந்தவர்களை அவர்களுடைய சொந்த வேனில் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் பலி


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ரத்னா பட்டாசு தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால், ஒப்பந்த தொழிலாளர்கள் 8 பேர் தொழிற்சாலைக்கு வெளியே மரத்துக்கு அடியில் அமர்ந்து வேலை .பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே கனி, மாரிமுத்து, செல்லையா ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முருகன் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
‘விதிகளை பின்பற்றாததே காரணம்’

மத்திய வெடிபொருள் பாதுகாப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றாததே, சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு வாரிய மண்டல துணை அலுவலர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவற்றை தொழிற்சாலைகள் முறையாக பின்பற்றுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது


   ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவன், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதனால், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று, அந்த நிறுவனத்தை மூட உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    இதே போன்று, மனுதாரர் தரப்பில் ஆஜரான ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ, பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துரைத்தார்.

    இதனை தொடர்ந்து, கடந்த 30ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெரிலைட் ஆலையை தமிழக அரசு மூடிவிட்டதாகவும் வைகோ தெரிவித்தார், இதனை கேட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழலை கண்காணிப்பதற்கும், இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதற்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உரிமை உண்டு என்றனர்.

ஜப்பான் மியாகோ மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்


     ஜப்பான் மியாகோ மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
     ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து, 525 கிலோ மீட்டர் தென் கிழக்கே அமைந்துள்ள மியாகோ மாகாணத்தை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
   இன்று அதிகாலை 5 மணி அளவில், கடலுக்கு அடியில், இந்த நிலநடுக்க மையம் கொண்டிருந்தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
   நிலநடுக்கப் பாதிப்புகள் மற்றும் உயிர் சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்க தகவல்களை உடனடியாக வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், தகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஜப்பான் அரசை அறிவுறுத்தியுள்ளது.
 
 கடந்த 2011-ஆம் ஆண்டு புகுஷிமா பகுதியில் ஏற்பட்ட பயங்கரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்தாகூர் அலுவலகம் முற்றுகை

    

    விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்தாகூர் அலுவலகத்தை முற்றுகையிடவந்த மாணவர்களுக்கும் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
   இலங்கைப் பிரச்னையை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாணவர்கள் அகற்ற முயன்றபோது காங்கிரஸ் கட்சியினருடன் மோதல் ஏற்பட்டது.
   இதனையடுத்து மத்திய அரசு மற்றும் காங்கிரசைக் கண்டித்து விருதுநகரில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் 18 மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.